Monday, February 9, 2009

பாஃப்டாவையும் வென்றார் இசைப்புயல் ரஹ்மான்

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான். விருது மேல் விருது குவித்துவரும் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறந்த இசைக்காக இந்த விருது ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. 9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஸ்லம்டாக்...' இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள். அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது. அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள். நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்

No comments: