Sunday, June 28, 2009

கட்டபொம்மன் காலத்து வெண்கல மணி ஒலிக்குமா?


திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்திலுள்ள கட்டபொம்மன் காலத்து மணியை ஜூலை 2-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது ஒலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வீமராஜா கூறியதாவது:
வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை திக்குவிஜய கட்டபொம்மு துரை ஆட்சியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெண்கல மணி வழங்கப்பட்டது. இந்த மணி கோயில் ராஜகோபுரத்தின் 7வது நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது இந்த மணி ஒலிக்கப்படும். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரையுள்ள 40 மணி மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கும்.
அதன்பிறகே கட்டபொம்மன் பூஜை முடித்து காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் கோயில் பிரசாதம் குதிரை வீரர் மூலம் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்திலுள்ள மணி கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போது ஒலிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதன் இரும்பு சங்கிலிகள் துருப்பிடித்து இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்போது ஜூலை 2ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டபொம்மன் காலத்து மணியின் சங்கிலியையும் சரி செய்து கும்பாபிஷேகத்தின் போது ஒலி எழுப்பச் செய்யவேண்டும். தொடர்ந்து கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மணி ஒலிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும். இதன்மூலம் கட்டபொம்மன் காலத்து நினைவுகள் மலரும்.

Wednesday, June 24, 2009

கொதிக்கும் நெய்யில் கைகளால் பணியாரம் சுட்ட தம்பதி



திருவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் கணவன், மனைவி இருவரும் கொதிக்கும் நெய்யில் பணியாரம் சுட்டனர். இதைக் காண ஏராளமானோர் திரண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் முத்து இருளாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறும். கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக சாமியாடியும், அவரது மனைவியும் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு குழிப்பணியாரம் சுடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் சாமியாடி ஆறுமுகப்பெருமாள்(55), மனைவி சுந்தரம்மாள்(50) ஆகியோர் பணியாரம் சுடத் தயாராகினர்.
மேளங்கள் முழங்க, பெண் பக்தர்கள் குலவை ஒலியெழுப்ப மாவை எடுத்து கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பணியாரம் சுட தொடங்கினர்.
கரண்டி எதுவுமின்றி பணியாரத்தை கையால் எடுத்து சேகரித்தனர். விடிய, விடிய ஆயிரத்துக்கும் அதிகமான பணியாரங்களை சுட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி அதிகாலை 4 மணி வரை நடந்தது. பின்னர், சாமிக்கு பணியாரங்கள் படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து சாமியாடி ஆறுமுகப்பெருமாள் கூறுகையில், ‘Ôஇந்த கோயிலில் பரம்பரையாக பணியாரம் சுடுகிறோம். 1982ம் ஆண்டு முதல் 27 ஆண்டாக பணியாரம் சுடுகிறேன்Ó என்றார்.

Monday, June 22, 2009

வீரகேசரி மென்பந்துச் சுற்றுப்போட்டி

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற வீரகேசரி நிறுவனத்தின் ஊழியர்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப்போட்டியில் ஒன்லைன் டிபென்டர்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. அந்த நிகழ்வின் சில ஒளிப்படங்கள்.