Sunday, April 26, 2009

பிரதமர் மன்மோகன்சிங் மீது `ஷூ' வீச்சு




குஜராத் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மன்மோகன்சிங் மீது என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஒருவர், `ஷூ' வீசினார். மேடைக்கு சற்று தொலைவிலேயே அது விழுந்தது.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் மீது செருப்பு வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 1983-ம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை விடுவித்ததற்காக, கடந்த 7-ந் தேதி அன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஒருவர் ஷூ வீசினார்.
அதன் பிறகு, ஏப்ரல் 10-ந் தேதியன்று அரியானா மாநிலம் குருசேத்ராவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிந்தால் மீது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர் ஷூ வீசினார். அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி அமர்ந்திருந்த மேடை மீது அதிருப்தி பா.ஜனதா பிரமுகர் ஒருவர் செருப்பை எறிந்தார். அந்த வரிசையில் பிரதமர் மன்மோகன்சிங் மீது நேற்று ஷூ வீசப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் முதன் முறையாக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஆமதாபாத் நகரில் உள்ள தாகூர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்து ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், தனது `ஷூ'வை கழற்றி பிரதமர் மன்மோகன்சிங்கை நோக்கி வேகமாக வீசினார்.
ஆனால், மேடை வரை அது செல்லவில்லை. பிரதமர் இருந்த இடத்தில் இருந்து சில அடிகள் முன்னதாக மைதானத்தில் விழுந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக 30 அடி தொலைவில் மேடை அமைக்கப்பட்டு இருந்ததால் பிரதமர் மேடையில் ஷூ விழவில்லை.
உடனே, பிரதமரின் பாதுகாப்புக்கு நின்றிருந்த தேசிய பாதுகாப்பு கமாண்டோ வீரர்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து இழுத்துச்சென்றனர். பின்னர், மாநில குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், `அந்த வாலிபரின் பெயர் ஹிதேஷ் சவுகான் என்பதும் பாபுநகரை சேர்ந்த அவர், ஆமதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்ïட்டர் என்ஜீனியரிங் மாணவர் என்பதும்' தெரியவந்தது.
இதற்கிடையே, ஷூ வீச்சு சம்பவம் நடந்த போதிலும் பிரதமர் தனது பேச்சை பாதியில் நிறுத்தவில்லை. முழுமையாக பேசி முடித்த பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் சக்தி சிங்கை அழைத்து, `அந்த மாணவரை மன்னித்து விட்டேன். அவர் மீது வழக்கு எதுவும் பதியாமல் விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோகில், "பிரதமர் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது'' என்றார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், "இதுபோன்ற சம்பவங்களை எப்போதுமே நாங்கள் கண்டித்து வருகிறோம். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க ஏராளமான வழிகள் உள்ளன. இந்த சம்பவத்தால் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் கூறுவது அற்பத்தனமானது. டெல்லியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டபோது காங்கிரஸ் என்ன செய்தது'' என்றார்.

1 comment:

யூர்கன் க்ருகியர் said...

தமிழர்களை வாழ்வாங்கு வாழவைக்கும்( ?) நம்ம பீத்தரமர் சாரி பிரதமர் தமிழ்நாட்டுக்கு எப்போ வரார்?